Wednesday, March 12, 2014
கடன் பட்டார் நெஞ்சம் போல்.....
=================================
படைத்தவர்-சுந்தரேசன் ஸுரேஷ்
==================================
காலை மணி ஆறு இருக்கும். அழைப்பு மணி சத்தம். ராகவன் அப்போதுதான் எழுந்து பல் விளக்கி விட்டு காபி குடித்து கொண்டு இருந்தான். "சீதா,கொஞ்சம் பாரேன்"-" "பொழுது விடிவதற்குள் கடன்காரன் மாதிரி யாரு வந்திருக்கான்னு"? என்றான். அவனது மனைவி சீதா சென்று கதவை திறந்தாள். "வரலாமா"?"காலங்கார்த்தாலை வேளையிலே தொந்தரவுக்கு மன்னிக்கணும்" என்றவாறே அவளது சம்மதத்துக்கு காத்திருக்காமல் உள்ளே நுழைந்தார் அம்பி.அழுக்கு வேஷ்டி-அதை விட அழுக்கு சட்டை- முகத்தில் குச்சி-குச்சியாக மூன்று நாள் தாடி- குசேலரை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.
ராகவன் ஒரு முன் கோபி மட்டும் அல்ல அவசர குடுக்கையும் கூட.அதனால் தான் பல நல்ல குணங்கள் இருந்தும் சோபிக்காமல் போனது. ஆறு மாதம் முன்பாக ரூபாய் இருபத்தைந்தாயிரம் கடனாக கொடுத்திருந்தான் அம்பிக்கு.அவரது மனைவிக்கு தண்டு வட்த்தில் ஒரு அறுவை-சிகிச்சை.அதற்கான மருத்துவ செலவுக்காக். அவரை பார்த்தவுடனே கோபம் பொத்துக்கொண்டு வந்தது. "என்ன மனுஷன் நீங்கள்"?"கொடுத்த வாக்கை காப்பாற்ற வேணாமா"? ஒரு மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று பணம் வாங்கி கொண்டு போய் மாதம் ஆறாகிறது"-"இன்னும் திருப்பி தந்த பாடு இல்லை"-“உங்க மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாளா அல்லது பரலோகம் போய் விட்டாளா”?"இப்ப என்ன இன்னும் கொஞ்சம் கடன் கிடைக்குமா என்று பார்க்க வந்தீர்களா"? என்று நெருப்பு துண்டங்களாக வார்தைகளை தூக்கி போட்டான்.
அம்பிக்கு முகம் சுருங்கி விட்டது. "அது வந்து- குடுக்க கூடாது என்று எண்ணமெல்லாம் இல்லை"-"ஒன்று மாத்தி ஒன்று பிரச்சனையாக இருந்ததினால் குடுக்க முடியாமல் போய் விட்டது" என்று குற்ற உணர்வுடன் பதில் அளித்தார்.
"இந்த நொண்டி சமாதானம் எல்லாம் வேண்டாம்"-"வாங்கின கடனை திருப்பி கொடுக்கும் வரை தேவையானால் பட்டினி கிடக்க கூட தயாரா இருக்கணும்" என்று சொற்களால் மேலும் குத்தினான் ராகவன்.
"சொன்னால் நம்ப மாட்டீர்கள்"-"ஆனால் உண்மை அதுதான்"-"நான் கடந்த ஆறு மாதங்களாக-ஒரு வேளை தான் சாப்பிடுகிறேன்"-"இரவு உணவை தவிர்த்துவிட்டேன்" -"வாயை கட்டி வயிற்றை கட்டியாவது உங்கள் கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான் என்ற அம்பியை தொடர்ந்து பேச விடாமல் குறிக்கிட்ட ராகவன் "சரி-சரி, இப்ப எதற்கு வந்திருக்கிறீர்கள்"? என்று கேட்டுவிட்டு "சொல்கிறேன் என்று தப்பாக நினைக்காதீர்கள்"-"உங்கள் மாதிரி இருக்கிறவர்கள் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்ப் கூடாது”- உங்கள் மகள் படித்து என்ன கிழிக்க போகிறாள்"? "படிப்பை நிறுத்திவிட்டு பேசாமல் நாலு வீடுகளுக்கு பத்து-பாத்திரம் தேய்க்க அனுப்புங்கள்"-"குடும்பத்துக்கு உதவியாக நாலு காசாவது சம்பாதிப்பாள்" என்றான்.
அம்பிக்கு காபி எடுத்து வந்த சீதாவினால் இந்த பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை."இந்தாங்க மாமா"-"காபி குடிங்க"என்றவள் ராகவனை நோக்கி "என்னங்க இது"-அந்த பெண் மிக நன்றாக படிப்பாள்"-"படிப்பை தவிரவும் பேச்சு போட்டி,கட்டுரை போட்டி,வினாடி-வினா நிகழ்சிகள்,விளையாட்டு போட்டிகள் என்று எல்லாவற்றிலுமே சிறந்து விளங்குபவள்"-"வகுப்பிலே எப்போதும் முதல் மாணவி"-"விஷயம் தெரியாமல் எதற்காக இலவச அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறீர்கள்"என்றாள் கடுப்போடு.
"இருக்கட்டும் அம்மா"-"பணம் திரும்ப வரவில்லையே என்ற ஆதங்கத்தில் 'சார்' அப்படி பேசுகிறார்"-"நான் வந்த காரியத்தை மறந்து விட்டு என்னமோ பேசிக்கொண்டு இருக்கிறேன்"என்றவரை திரும்பவும் இடைமறித்து "வேறு எதற்கு வந்திருக்க போகிறீர்கள்"-"இன்னொரு நெருக்கடி ஏற்பட்டு விட்டது"-"இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் கொடுங்கள்" என்று கேட்க போகிறீர்கள்"-"அவ்வளவுதானே" என்றான் ராகவன்.
"அப்படி எல்லாம் இல்லை"-"உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க தான் வந்துள்ளேன்"-"நீங்கள் செய்து உதவிக்கு என் உடம்பை செருப்பாக தைத்து போடணும் -"என் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றார் அம்பி. தொடர்ந்து 'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்று கம்ப ராமயணத்தில் வரும்.-"நானும் அந்த மாதிரி மன நிலையிலே தான் இந்த ஆறு மாதங்களாக இருந்தேன்"-"ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்று இரவு நிம்மதியாக உறங்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.
ராகவனுக்கே மனிதரை பேசவே விடாமல் கொஞ்சம் அவசரப்பட்டு வார்த்தைகளை அதிகப்படியாக் கொட்டி விட்டோமோ என்று தோன்றியது . சீதாதான் நிலைமையை சமாளித்தாள் "-போகட்டும்- எப்படியோ வாங்கின கடனை திருப்பி கொடுத்துவிட்டீர்கள்"-“பணம் கிடைத்து விட்ட்து என்ற் சந்தோஷம் இவருக்கு”-“கடனை அடைத்து விட்டோமே என்று திருப்தி உங்களுக்கு”-அது சரி பணத்துக்கு எப்படி ஏற்பாடு செய்தீர்கள்"? என்று கேட்டாள்.
அவள் கேட்டதுதான் தாமதம் அம்பி மாமா பாவம் கண்ணில் நீர் கசிந்துவிட்டது"அதை ஏன் கேட்கிறீர்கள்"? "பாவம் என் பெண்" என்று குரல் கம்ம சொல்ல தொடங்கினார். " அரிமா சங்கம் நடத்திய பள்ளி அளவிலான ஒரு கட்டுரை போட்டியில் என் பெண் முதல் பரிசாக ஒரு பவுனில் ஒரு தங்க சங்கிலி வென்று இருந்தாள்"-"நான் இந்த மாதிரி வாங்கின கடனை திருப்பி குடுக்க முடியாத நிலையில் இருப்பதை கண்ட குழந்தை "அப்பா இந்த சங்கிலையை விற்று விட்டு ராகவன் மாமாவின் கடனை அடைத்து விடுங்கள்" -"இன்னும் ஏதாவது போட்டி நடக்காமலா போய் விடும்?"நான் பரிசு வாங்காமலா போய் விடுவேன்"? என்றாள். "பாவி மனுஷன் நான்"-"பெற்ற பெண்ணுக்கு நகை வாங்கி போடாததோடு மட்டும் அல்லாமல் அவள் திறமைக்கு கிடைத்ததை கூட அவளிடமிருந்து பிடுங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறேன்" என்றார்.
அப்போதுதான் ராகவனோ அம்பி மாமாவோ சற்றும் எதிர்பார்க்காத ஒரு காரியத்தை செய்தாள் சீதா.மளமளவென்று தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் சங்கிலியை கழற்றி "மாமா- இதை உங்கள் பெண்ணின் கழுத்தில் போடுங்கள்"- "குழந்தை பாவம் மூளி கழுத்தாக இருக்க வேண்டாம்"- "இது நான் கொடுத்த பரிசாக இருக்கட்டும்" என்றாள்.
கண்களில் நீர் மல்க,இரு கைகளையும் குவித்து "நீங்க தீர்க்க சுமங்கலியா நகை,நட்டோடு நீண்ட நாள் இருக்கணும்"- "அம்மா நீ என்னை விட வயதில் சிறியவளாக இருந்தாலும் உன் காலில் விழுந்து வணங்கணும் போல் இருக்கு" என்ற அம்பி மாமாவிடம் “பெரியவர் நீங்க் அப்படி எல்லாம் சொல்ல கூடாது”-“என்னையும் உங்கள் இன்னொரு பெண்ணாக் நினைத்து கொள்ளுங்கள்”-“அக்கா தங்கைக்கு செய்ய உரிமை இல்லையா”? என்று தடுத்து கொண்டிருந்தாள் சீதா. தன் மனைவியின் பெருந்தன்மைக்கு முன் தான் மிகவும் சிறுத்து போய் நின்றான் ராகவன்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment